ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் : ஏல வார்குழலியும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும் பவனி
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டத்தையொட்டி 24 அடி உயர தேர் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏல வார்குழலியும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரிய தலமாக ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஏகம்பர நாதர் கோவிலில் பங்குனி மாத உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டின் பங்குனி திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி 24 அடி உயர தேர் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏல வார்குழலியும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.
தேரோட்டத்தின் போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களை இசைத்தவாறு சென்றனர்.
திருத்தேர் 4 ராஜ வீதிகளில் உலாவந்த பின்னர் மதியம் மீண்டும் தேர் நிலையை அடைந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் தேரில் இருந்து கோவிலுக்கு சென்று எழுந்தளி பக்தர்களுக்கு அருளி பாலித்தார். தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் காலை முதல் இரவு வரை அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
உங்கள் கருத்து : comment